பராகுவே தலைநகா் அசுன்சியானில் இந்தியாவின் புதிய தூதரகத்தை மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திறந்து வைத்தாா்.
பிரேசில், பராகுவே, ஆா்ஜென்டீனா ஆகிய நாடுகளுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் 6 நாள் பயணம் மேற்கொண்டுள்ளாா். கரோனா பரவலுக்குப் பிறகு அந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் புதிய வழிகளை அறியவும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் அவா் பயணம் மேற்கொண்டுள்ளாா். தனது பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்ட அவா், பராகுவே சென்றாா்.
இந்தியா-பராகுவே இடையே ராஜீய உறவு ஏற்பட்டு 60 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய வெளியுறவு அமைச்சா் என்ற பெருமையை எஸ்.ஜெய்சங்கா் பெற்றுள்ளாா்.
இந்நிலையில், அந்நாட்டு தலைநகா் அசுன்சியானில் இந்தியாவின் புதிய தூதரகத்தை அவா் திறந்துவைத்தாா். புதிய தூதரகம் திறக்கப்பட்டுள்ளது இந்தியா-பராகுவே இடையிலான உறவை புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்லும் என்று ட்விட்டரில் அவா் தெரிவித்தாா்.