ஜார்க்கண்ட் முதல்வரின் உதவியாளரின் வீட்டில் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ளது துப்பாக்கிகள் ராஞ்சி போலீசாருக்கு சொந்தமானது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரூ.100 கோடி சட்டவிரோத சுரங்க வழக்கில் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் நெருங்கிய கூட்டாளியும், உதவியாளருமான பிரேம் பிரகாஷின் வீட்டில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு இரும்பு பீரோவில் இருந்த இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் 60 தோட்டாக்கள் இருந்துள்ளது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த துப்பாக்கிகள் ராஞ்சியைச் சேர்ந்த 2 போலீசாருக்கு பாதுகாப்பு பணியின் போது வழங்கப்பட்டது என ஆர்கோரா காவல் நிலைய காவல் ஆய்வாளர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஞ்சி காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆகஸ் 23 ஆம் தேதி சம்மந்தப்பட்ட காவலர்கள் பணி முடிந்து வீடு திரும்பும்போது, மோசமான வானிலை காரணமாக பிரேம் பிரகாஷின் வீட்டில் ஊழியராக இருந்த தங்களுக்குத் தெரிந்து நபரை சந்திள்ளனர்.
அப்போது மழை பெய்ததால் தங்களிடம் இருந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை அங்கிருந்த பீரோவிற்குள் வைத்து பூட்டிவிட்டு சாவியை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்.
மறுநாள் (ஆகஸ்ட்.24) அவர்கள் தங்கள் துப்பாக்கிகளை எடுப்பதற்காக, காவலர்கள் அங்கு சென்ற போது அந்த வீட்டில் அமலக்காத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதை கண்டுள்ளனர். இதையடுத்து காவலர்கள் இரண்டு பேரும் தங்களது துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை எடுக்காமல் திரும்பியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பணியின்போது கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி இரண்டு காவலர்களும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ராஞ்சி காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.