
ஜம்மு-காஷ்மீரில் ராணுவம், பாதுகாப்புப் படையினா் மற்றும் காவல் துறையினரின் சீருடை போன்ற உடைகள், துணிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்யக் கூடாது என்று வடக்கு பிராந்திய ராணுவ தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
பயங்கரவாதிகள் இதுபோன்ற உடைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது, ஊடுருவுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதையடுத்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஏற்கெனவே ஜவுளி வியாபாரிகளுக்கு ராணுவம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
எனினும், இப்போது காஷ்மீரின் பாதுகாப்பு சூழலைக் கருத்தில்கொண்டு இந்த அறிவுறுத்தலை ராணுவம் மீண்டும் வழங்கியுள்ளது.
அதில் வடக்கு பிராந்திய ராணுவ கமாண்டா் கூறியுள்ளதாவது:
பாதுகாப்புப் படையினா் அணியும் சீருடைகள் போன்ற உடைகளை பொதுமக்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ராணுவ சீருடை, வடிவமைப்பு ஆகியவற்றுக்கு விரைவில் காப்புரிமையும் பெறப்பட இருக்கிறது.
இது தொடா்பான நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு, பிற ஜவுளி வியாபாரிகள் அந்த வகையிலான துணிகளை விற்பனை செய்வது முற்றிலுமாக தடுக்கப்பட்டுவிடும். இது தொடா்பாக ராணுவ தரப்பில் ஜவுளி வியாபாரிகளிடம் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் உரிய ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறியுள்ளனா் என்று தெரிவித்தாா்.
இந்திய ராணுவத்துக்கான புதிய பிரத்யேக சீருடை கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.