புது தில்லி: 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கையே காரணம் என்று குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக இன்று காலை அறிவித்த குலாம் நபி ஆசாத், தனது விலகல் கடிதத்தை கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் வழங்கினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், ஜம்மு -காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத்தின் விலகல், காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியிருக்கும் குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி மீது காரசார குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதாவது, காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகள் அனைத்தும் ராகுல் அல்லது அவரது உதவியாளர்களாலேயே எடுக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்த கலந்தாலோசனை முறையை முற்றிலும் ராகுல் ஒழித்துவிட்டார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெற்ற தோல்விக்கு ராகுல் காந்தியின் குழந்தைத் தனமான நடவடிக்கையே காரணம். காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி பெயரளவில் மட்டுமே தலைவராக இருக்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.