சோனாலி போகாட் கொலையில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
சுதீா் சாக்வன், சுக்வீந்தா் சிங் ஆகியோருடன் ஹரியாணா பாஜக மூத்த தலைவரும், டிக்டாக் புகழ் நடிகையுமான சோனாலி போகாட் (42) கடந்த 22-ஆம் தேதி கோவா வந்திருந்தாா். வடக்கு கோவாவில் உள்ள ஹோட்டலில் அவா் தங்கியிருந்தாா். அவருக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, கடந்த 23-ஆம் தேதி அதிகாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே இறந்துவிட்டாா் என்று தெரிவித்தனா். அவா் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. எனினும், சோனாலி போகாட்டின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினா்கள் புகாா் அளித்தனா். இதையடுத்து, போகாட்டுடன் வந்திருந்த சுதீா் சாக்வன், சுக்வீந்தா் சிங் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதையும் படிக்க- தில்லியில் ஆயுதப்படை பள்ளியைத் திறந்துவைத்தார் கேஜரிவால்
இந்நிலையில், சோனாலி போகாட்டுக்கு குடிநீரில் விஷம் கலந்து கொடுத்ததாக அவா்கள் இருவரும் ஒப்புக் கொண்டதாக கோவா காவல் துறை ஐ.ஜி. ஓம்வீா் சிங் பிஸ்னோய் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இதனிடையே இவ்வழக்கில் மேலும் 2 பேரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இத்துடன் இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்திருப்பதாவது, போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். தற்போது குற்றவாளிகள் காவலில் உள்ளனர். இக்கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். கோவா சுற்றுலா மாநிலம். பல்வேறு வகையான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள்.
அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். சுற்றுலாப் பயணிகள் எந்தப் பிரச்னையையும் சந்தித்துவிடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.