தின்டோரி: மத்தியப் பிரதேச அரசுப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர், அதீத அன்பால், தனது மனைவியின் உடலை வீட்டுக்கு உள்ளேயே புதைத்த நிலையில், அதற்கு அக்கம் பக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வீட்டுக்குள்ளேயே உடலை புதைத்துவிட்டதால், அக்கம் பக்கத்தினர் அதிருப்தி அடைந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உள்ளூர் நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு, உடலைத் தோண்டி எடுத்து, இடுகாட்டில் புதைத்து பிரச்னையை தீர்த்து வைத்துள்ளது.
ஓம்கார் தாஸ் என்ற 50 வயது ஆசிரியரின் மனைவி ருக்மணி (45). உடல்நலக் குறைவால் காலமான ருக்மணியின் உடலை ஓம்கார் வீட்டுக்குள்ளேயே புதைப்பது என முடிவு செய்தார். ஆனால் இதற்கு அக்கம் பக்கத்தினரும் அவரது உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பனிகா சமுதாய மக்கள், தங்கள் வீட்டுக்குள்தான் இறந்தவர்களின் உடலை புதைப்பார்கள் என்று கூறி பலரையும் சமாதானப்படுத்திவிட்டார்.
ஆகஸ்ட் 23ஆம் தேதி இறுதிச் சடங்குகள் நடைபெற்று, ருக்மணி உடல் வீட்டுக்குள்ளேயே புதைக்கப்பட்டது. ஆனால், இதற்கு அக்கம் பக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகத்தினர் தலையிட்டு, உடலைத் தோண்டி எடுத்து, இடுகாட்டில் புதைக்க நடவடிக்கை எடுத்தனர்.