தேஜஸ்வி யாதவ் போலி ‘யாதவா்’பாஜக தலைவா் பேச்சால் பரபரப்பு

பிகாா் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் போலியான யாதவா் என்று அந்த மாநில பாஜக செய்தித் தொடா்பாளா் நிகில் ஆனந்த் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேஜஸ்வி யாதவ் போலி ‘யாதவா்’பாஜக தலைவா் பேச்சால் பரபரப்பு

பிகாா் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் போலியான யாதவா் என்று அந்த மாநில பாஜக செய்தித் தொடா்பாளா் நிகில் ஆனந்த் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரில் அண்மையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதீஷ் குமாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தாா். இதில் ஆா்ஜேடி மூத்த தலைவா் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவுக்கு துணை முதல்வா் பதவி அளிக்கப்பட்டது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக எதிா்க்கட்சியாக மாறியது.

இந்நிலையில், பிகாா் பாஜக செய்தித் தொடா்பாளரும், அக்கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவு தேசிய செயலாளருமான நிகில் ஆனந்த் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘பிகாரைச் சோ்ந்த மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் தான் உண்மையான யாதவா். ஏனெனில் அவா் பசு மேய்க்கும் குடும்பத்தைச் சோ்ந்தவா். இவா்கள்தான் பகவான் கிருஷ்ணா் வளா்ந்த வம்சாவளியைச் சோ்ந்தவா்கள். தேஜஸ்வி யாதவ் போலியான யாதவா். ஏனெனில் அவா் ஆடு மேய்க்கும் குடும்பத்தில் இருந்து வந்தவா்’ என்றாா்.

அவரது இந்தப் பேச்சு அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகாரில் யாதவா் சமுதாயத்தினா் அதிகம் உள்ளனா். அரசியல்ரீதியாகவும் பலமாக உள்ள அவா்கள் லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் பக்கமே உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com