புது தில்லி: தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் நடத்தப்பட்ட சிபிஐ சோதனையில் என்ன கிடைத்ததென்று நாட்டுக்குச் சொல்லுங்கள் என பாஜக தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
தில்லி முதல்வரும், கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் தலைமையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சிபிஐ சோதனையில் என்ன கிடைத்தது என்று வாசகம் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்திருந்தனர்.
துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது பொய் வழக்குகள் பதிவு செய்யவும், கேஜரிவால் தலைமையிலான அரசுக்குக் களங்கம் விளைவிக்கவும் பாஜக தலைமையிலான நரேந்திர மோடி அரசு சிபிஐயை பயன்படுத்துவதாகவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடப்போவதாக அறிவித்தது முதல் பாஜகவுக்கு அச்சம் வந்துவிட்டதாகவும், அதனால்தான் ஆம் ஆத்மி கட்சிக்கு களங்கம் விளைவிக்க பாஜக அனைத்து முயற்சிகளையும் செய்வதாகவும் அவர்கள் கூறினர்.