பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புதன்கிழமை சந்தித்து பேசினார்.
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணியுடன் பிகாரில் ஆட்சியமைத்துள்ளார் நிதீஷ் குமார். பிகாரில் ஏற்பட்ட இந்த திடீர் அரசியல் திருப்பம் நாடு முழுவதும் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது. நிதீஷ் குமாரின் இந்த அரசியல் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்வை புதன்கிழமை பிகாரில் சந்தித்துப் பேசினார். பாட்னாவில் நடைபெற்ற இந்த சந்திப்பைத் தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிரான வலிமையான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் முயன்றுவரும் சூழலில் சந்திரசேகர் ராவ், நிதீஷ் குமார் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.