மத்தியப் பிரதேசத்தில் அழைக்காமல் திருமணத்திற்கு வந்து சாப்பிட்ட பட்டதாரி மாணவனை, திருமண வீட்டார் பாத்திரத்தை கழுவ விட்டு தண்டனை கொடுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருமணத்தில் விருந்து வைப்பதே ஏழைமக்கள் உள்பட பலரும் வயிறார உண்டு மனதார வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் என்று கூறப்படும் நிலையில், மத்தியப் பிரதேசத்தில் பட்டதாரி மாணவனுக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு எம்.பி.ஏ. பயிலும் மாணவர் சென்றுள்ளார். ஜபால்பூரைச் சேர்ந்த அவர், போபாலில் தங்கி எம்பிஏ பயின்று வருகிறார்.
கல்லூரியில் தங்கிப் படிப்பதால், திருமண நிகழ்ச்சிக்கு சென்று அங்கு இரவு உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவரைப் பிடித்த திருமண வீட்டார், அழைக்காமல் திருமணத்திற்கு வந்து சாப்பிடுகிறாயா எனக் கூறி தண்டனை வழங்கியுள்ளனர்.
இரவு உணவு சாப்பிட்டதற்காக திருமணத்திற்கு உணவு செய்த பாத்திரங்களைக் கழுவ மாணவரை நிர்பந்தித்துள்ளனர். அதனை விடியோப் பதிவும் செய்துள்ளனர்.
எம்பிஏ படிக்கிறேன் என்கிறார். உனது பெற்றோர் பணம் கொடுப்பதில்லையா? ஜபால்பூருக்கே நீ கெட்ட பெயரை வாங்கிக்கொடுத்துள்ளாய் என விடியோ எடுப்பவர் கூறுகிறார்.
திருமண வீட்டில் உண்பதற்காக வந்த எம்பிஏ மாணவனை பாத்திரம் கழுவ வைத்த திருமண வீட்டாரின் செயலுக்கு பலர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.