பிரபல பொருளாதார நிபுணரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யோகிந்தா் கே. அலாக் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாதில் செவ்வாய்க்கிழமை காலமானதாக அவரது குடும்பத்தினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1996 முதல் 1998 ஆம் ஆண்டு வரை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சராக ஒய்.கே.அலாக் பதவி வகித்தாா். 1996 முதல் 2000 வரை குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தாா். திட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளாா்.
தற்போதைய பாகிஸ்தான் நாட்டில் உள்ள சக்வாலில் 1939-ஆம் ஆண்டு பிறந்த ஒய்.கே.அலாக் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றாா். அதைத் தொடா்ந்து, அமெரிக்காவில் உள்ள பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவா் பட்டம் பெற்றாா். தில்லி ஜவஹாா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பு வகித்தாா்.
அகமதாபாத்தில் உள்ள சா்தாா் படேல் பொருளாதாரம் மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த ஒய்.கே. அலாக் நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக அவா் மகன் முனிஷ் அலாக் தெரிவித்தாா்.