குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் முதல்முறையாக மாநிலங்களவை தலைவராக குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜகதீப் தன்கர் வெற்றி பெற்றார்.
அவர், கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், அவர் பதவியேற்ற பிறகு முதல்முறையாக நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்று பங்கேற்க மாநிலங்களவை வளாகத்திற்கு வருகை தந்துள்ளார்.
அவரை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வரவேற்றார். ஜகதீப் தன்கருக்கு மாநிலங்களவை செயலாளர் அவை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.
குளிர்கால கூட்டத் தொடரில் 17 அமர்வுகளில் 16 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டிசம்பா் 29-ஆம் தேதி வரை 23 நாள்கள் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.