
கெளதம் அதானி
புதுதில்லி: ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள ஆசியாவின் சமூக தொண்டாளர்களின் 16 ஆவது பதிப்பு பட்டியலில் இந்திய கோடீஸ்வரர்களான கௌதம் அதானி, ஷிவ் நாடார் மற்றும் அசோக் சூட்டா, மலேசிய இந்திய தொழிலதிபர் பிரமல் வாசுதேவன் மற்றும் அவரது வழக்குரைஞர் மனைவி சாந்தி காண்டியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில், இந்தியாவில் சமூக தொண்டு பணிகளை கௌதம் அதானி அதிக அளவில் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், நடப்பாண்டு ஜூன் மாதத்தில் 60 ஆவது வயதில் அடியெடுத்து வைத்துள்ள கௌதம் அதானி ரூ.60,000 கோடிக்கு சமூக நலப்பணிகளை மேற்கொள்ள இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு ஆகிவற்றில் அதானி அறக்கட்டளை பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
கடந்த 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் 37 லட்சம் ஏழை மக்களுக்கு உதவி வருகிறது.
அடுத்ததாக இடம் பெற்றுள்ள தொழிலதிபர் ஷிவ் நாடார், அறக்கட்டளையின் மூலம் பல்வேறு சமூக நல திட்டங்களுக்காக 1 பில்லியன் டாலர் வரை நன்கொடை அளித்து இந்தியாவின் சிறந்த நன்கொடையாளர்களில் ஒருவராக இடம் பெற்றுள்ளார்.
கல்வியின் மூலம் தனிநபர்களை மேம்படுத்துவதன் மூலம் சமமான, தகுதி அடிப்படையிலான சமுதாயத்தை உருவாக்க எண்ணி, 1994 இல் அவர் நிறுவிய அறக்கட்டளைக்கு இந்த ஆண்டு அவர் ரூ.11,600 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இதையும் படிக்க | பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் குறித்து திட்டம் வகுப்பது அவசியம்: சௌமியா சுவாமிநாதன்
ஷிவ் நாடார் அறக்கட்டளை சென்னையில் பள்ளியை அமைப்பதாக அறிவித்துள்ளது. எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை உருவாக்கிய நாடார், கலை மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் அறக்கட்டளை மூலம் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களை அமைக்க உதவியுள்ளார். அவர் 2021 இல் ஐடி சேவை நிறுவனத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்து விலகினார்.
தொழிலதிபர் அசோக் சூட்டா, நரம்பியல் மற்றும் முதுமை தொடர்பான உடல்நலக் கோளாறுகளுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2021 ஏப்பரலில் தொடங்கிய மருத்துவ ஆராய்ச்சி மைய அறக்கட்டளைக்கு ரூ.600 கோடி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவ ஆராய்ச்சி மைய அறக்கட்டளை ரூ.200 கோடி செலவில் தொடங்கினார், அதை அவர் மூன்று மடங்காக உயர்த்தினார்.