மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயதுச் சிறுவன், 5 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை அதிகாலை இறந்த நிலையில் மீட்கப்பட்டாா்.
மத்திய பிரதேசம் மாநிலம், பெதுல் மாவட்டத்தில் உள்ள மாண்டவி கிராமத்தில் தனது வீட்டருகே உள்ள வயலில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தன்மய், அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தாா். அதில் 35 அடி முதல் 45 அடி வரையிலான ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினா், மண்அள்ளும் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் அருகில் குழி தோண்டி சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
பல்வேறு மீட்பு முயற்சிகள் ஐந்து நாட்கள் தொடா்ந்து நடைபெற்று வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, சிறுவன் இறந்திருக்கக் கூடும் என்று பெதுல் மாவட்ட ஆட்சியா் அமன்பிா் சிங் பெய்ன்ஸ் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, 5-ஆவது நாளான சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தன்மய் சடலமாக மீட்கப்பட்டாா்.