அசாமின் காஸிரங்கா தேசிய பூங்கா அருகே ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் தாக்கியதில் 70 வயதுடைய முதியவர் ஒருவர் பலியானார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை போககாட் அருகே உள்ள சோஹோலா போகிபதர் பகுதியில் நடந்துள்ளது.
இறந்த நபர் தாராசன் சௌத்ரி என்று அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் கூறுகையில், "தாராசன் சௌத்ரி மாடுகளை மேய்ச்சலுக்கு நெல் வயலுக்கு சென்றிருந்த நேரத்தில் காண்டாமிருகத்தால் தாக்கப்பட்டார்."
இதையும் படிக்க- ஆந்திரத்தில் வணங்கச் சென்ற பாஜக எம்பியை எட்டி உதைத்த பசு மாடு
காஸிரங்கா தேசிய பூங்கா அதிகாரி ரமேஷ் கோகோய் கூறுகையில், "தேசிய பூங்காவிலிருந்து விலகிச் சென்ற காண்டாமிருகத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் பலியானார்".
"இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6:30 மணியளவில் நடந்தது. காசிரங்கா தேசிய பூங்காவிலிருந்து வழிதவறி வந்த காண்டாமிருகம் ரட்டன் சபொரி பகுதியில் ஒருவரைக் கொன்றது. அவர் மேய்ச்சலுக்காக மாடுகளுடன் அந்தப் பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. திடீரென்று காண்டாமிருகம் தோன்றி அந்த நபரை தாக்கியது, அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்" என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும், காஸிரங்கா தேசிய பூங்காவிற்குள் காண்டாமிருகம் தாக்கியதில் வனக்காவலர் உட்பட இருவர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.