நாட்டின் முப்படைகளில் 1.35 லட்சம் காலியிடங்கள் உள்ளன: மத்திய அமைச்சர் தகவல்

நாட்டின் முப்படைகளில் 1.35 லட்சம் பாதுகாப்பு வீரர்களுக்கான காலியிடங்கள் இருப்பதாகவும், அதிகபட்சமாக ராணுவத்தில் 1.18 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படமால் உள்ளதால்
நாட்டின் முப்படைகளில் 1.35 லட்சம் காலியிடங்கள் உள்ளன: மத்திய அமைச்சர் தகவல்
Published on
Updated on
1 min read


புதுதில்லி: நாட்டின் முப்படைகளில் 1.35 லட்சம் பாதுகாப்பு வீரர்களுக்கான காலியிடங்கள் இருப்பதாகவும், அதிகபட்சமாக ராணுவத்தில் 1.18 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படமால் உள்ளதால் பணியாளர் பற்றாக்குறையால் முப்படைகளும் தத்தளித்து வருகின்றன. 

இதுதொடர்பாக மக்களவையில் மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளதாவது: 

முப்படைகளில் 1.35 லட்சம் பாதுகாப்பு வீரர்களுக்கான காலியிடங்கள் உள்ளன. கடந்த ஜூலை 1 ஆம் தேதி நிலவரப்படி, இளநிலை அதிகாரி பணியிடங்கள் உள்பட ராணுவத்தில் 1.18 லட்சம் காலியிடங்கள் உள்ளன. 

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, இந்திய கடற்படையில் 11.587 வீரர்களுக்கும், நவம்பர் 1 ஆம் தேதி நிலவரப்படி, விமானப்படையில் 5,819 வீரர்களுக்கான காலியிடங்கள் உள்ளன. 

“இந்திய ராணுவத்தில் மொத்தம் 40,000 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டில் இந்திய கடற்படையில் மொத்தம் 3,000 காலியிடங்களுக்கும், இந்திய விமானப்படையில் 3,000 காலியிடங்கள் அக்னிபத் திட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன,” என்று பட் கூறினார்.

பாதுகாப்புப் படைவீரர்கள் அக்னிபத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படுவர். முப்படைகளிலும் ஆண்டுக்கு சராசரியாக 60 ஆயிரம் காலியிடங்கள் ஏற்படுவதாகவும், அதில் தோராயமாக 50,000 பணியிடங்கள் ராணுவத்திற்கானது என்றும் குறிப்பிட்ட அமைச்சர்,  கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றினால் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக ராணுவத்தில் 1.08 லட்சம் வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

கரோனா பெருந்தொற்றின் நிலைமை மேம்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஆள்சேர்ப்புப் பணிகள் தொடங்கியுள்ளதால் இந்த காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட்டு வரும் ஆண்டுகளில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அஜய் பட் கூறினார். 

மேலும், மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், பாதுகாப்பு அமைச்சகத்தின் பல்வேறு சேவைகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகத்தின் கீழ் சுமார் 45,906 ஏக்கர் பாதுகாப்பு நிலம் தற்போது காலியாக உள்ளது என்று கூறினார். 

பாதுகாப்பு விமானநிலைய உள்கட்டமைப்பின் நவீனமயமாக்கலை அரசாங்கம் இரண்டு கட்டங்களாக மேற்கொண்டு வருகிறது. முதல் கட்டத்தின் கீழ் விமானநிலையங்களை நவீனமயமாக்க பட்ஜெட்டில் ரூ.1,215.35 கோடியும், இரண்டாம் கட்டம் ரூ.1,187.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அஜய் பட் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com