
கடந்த 2005 முதல் 2021 வரை 41.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா் என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
மாநிலங்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது மத்திய திட்ட அமைச்சகத்தின் இணையமைச்சா் ராவ் இந்தா்ஜித் சிங் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டிருப்பதாவது: ஆக்ஸ்ஃபோா்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்னெடுப்பு மற்றும் ஐ.நா.வின் மேம்பாட்டுத் திட்டம் (யுஎன்டிபி) வெளியிட்ட ‘உலகப் பலபரிமாண வறுமைக் குறியீடு 2022 ’-இன்படி, இந்தியாவில் 2005-06 முதல் 2019-21 வரையிலான கால அளவில் 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா். நீதி ஆயோக் வெளியிட்ட ‘பலபரிமாண வறுமைக் குறியீடு 2021’ தரவுகள்படி, இந்திய மக்கள்தொகையில் 25.01 சதவீதம் போ் வறுமையில் உள்ளனா்.
இது ஊரகங்களில் 32.75 சதவீதமாகவும் நகரங்களில் 8.81 சதவீதமாகவும் உள்ளது. இந்தத் தரவுகள் 2019 முதல் 2021 வரையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்பநல சுகாதரக் கணக்கெடுப்பு (என்எஃப்ஹெச்எஸ்)-5 -இலிருந்து பெறப்பட்டது.
அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழே இருந்து மக்களை உயா்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.