இந்திய, சீனப் படைகள் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவித்ததால், மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சிகள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இந்திய படையினருடன் சீனப் படையினா் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகவும், எல்லையில் அமைதியை ஏற்படுத்த இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா் என்றும் இந்திய ராணுவம் திங்கள்கிழமை தெரிவித்திருந்தது.
இதையடுத்து, எதிர்க்கட்சிகள் குளிர்காலக் கூட்டத்தொடரில் இப்பிரச்னையை எழுப்பியதை தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று இரு அவைகளிலும் விளக்கம் அளித்திருந்தார். ஆனால், விவாதத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று மாநிலங்களவை கூடியவுடன், எல்லைப் பிரச்னை குறித்து விவாதம் நடத்த வேண்டுமென்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தார்.
கோரிக்கை மறுக்கப்பட்டதால், காங்கிரஸ், திமுக, திரிணாமூல், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், தெலுங்கு தேசியம் உள்பட 17 கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.