புது தில்லி: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் என்ற இளைஞருக்கு அமெரிக்காவில் சென்று வாழ வேண்டும் என்பது விருப்பம். ஆனால், அதற்காக அவர் கையாண்ட குறுக்கு வழி அவரை அமெரிக்கா கொண்டு செல்லவில்லை. காவல்நிலையத்துக்குத்தான் கூட்டிச்சென்றது.
தன்னுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரர் அமெரிக்காவில் வாழ்வதாகவும், அவர் இறந்துவிட்டதால், இறுதிச் சடங்கு செய்ய அமெரிக்கா செல்ல வேண்டும் என்றும் கூறி அமெரிக்காவுக்கு விசா பெற முயன்றார்.
இதையும் படிக்க.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ஆதரவு உள்ளே வெளியே!!
ஆனால், அவர் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அமெரிக்க தூதரகம் தில்லி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளது.
உடனடியாக ஜஸ்விந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு போலி ஆவணங்கள் தயாரித்துக் கொடுத்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விசா நேர்காணலுக்காக பஞ்சாப் மாநிலத்திலிருந்து தில்லி வந்து தங்கியிருந்த ஜஸ்விந்தர், கண்ணீருடன் அமெரிக்க தூதரம் சென்று நியூயார்க் நகரில் தனது சகோதரன் பலியாகவிட்டதாகவும், இறுதிச் சடங்கு செய்ய அமெரிக்கா செல்ல விசா வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதற்காக பல்வேறு ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். தனது சகோதனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்று கூறி எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
ஆனால், மிகவும் திறமையான அமெரிக்க தூதரக அதிகாரிகளை, ஜஸ்விந்தரால் ஏமாற்ற முடியவில்லை. நியூ யார்க்கில் இவர் சொல்லும்படியாக குல்விந்தர் என்று யாரும் வசிக்கவேயில்லை என்பதை உறுதி செய்துவிட்டனர்.
பிறகு உரிய முறையில் விசாரணை நடத்தி, காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இவருக்கு போலி ஆவணங்களை அமெரிக்காவிலிருந்து தயாரித்து அனுப்பிய நண்பருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.