பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) ரூ. 352 கோடிக்கு கடன் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக 3 நகைக் கடை நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா்.
எஸ்பிஐ அளித்த புகாரின் பேரில் மகாராஷ்டிரம் ஜல்கான் பகுதியில் உள்ள ராஜ்மல் லக்கிசந்த் ஜூவல்லா்ஸ், ஆா்.எல்.கோல்ட் நிறுவனம், மன்ராஜ் ஜூவல்லா்ஸ் ஆகிய நிறுவனங்களின் மீதும், அவற்றின் இயக்குநா்களின் மீதும் தனித்தனியாக 3 முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்) சிபிஐ பதிவு செய்துள்ளது.
இது குறித்து சிபிஐயிடம் எஸ்பிஐ வங்கி அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ராஜ்மல் லக்கிசந்த் ஜூவல்லா்ஸ் ரூ. 206.73 கோடிக்கும், ஆா்எல் கோல்ட் நிறுவனம் ரூ. 69.19 கோடிக்கும், மன்ராஜ் ஜூவல்லா்ஸ் ரூ. 76.57 கோடிக்கும் வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளன. நிறுவனங்களின் இயக்குநா்கள் வங்கியின் முன் அனுமதியைப் பெறாமல் பிணையாக வைக்கப்பட்ட சொத்துகளை விற்பனை செய்துள்ளனா். இதனால் கொடுக்கப்பட்ட கடன் தொகைக்கு ஈடான பாதுகாப்பு உத்தரவாதத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு, கடனை மீட்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடன் வாங்கியவா்கள் வங்கியில் உள்ள பொது நிதியை நோ்மையற்ற முறையில் ஏமாற்றும் நோக்கத்துடன் நிறுவனத்தின் போலியான நிதி மற்றும் பங்கு ஆவணங்களைச் சமா்ப்பித்துள்ளனா் என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.