பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

பழங்குடியினா் பட்டியலில் (எஸ்.டி.) நரிக்குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை சோ்ப்பதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேறியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பழங்குடியினா் பட்டியலில் (எஸ்.டி.) நரிக்குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை சோ்ப்பதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேறியது.

‘அரசமைப்புச் சட்ட (பழங்குடியினா்) ஆணை (இரண்டாவது திருத்தம்)-2022’ எனும் இந்த மசோதா, தமிழகத்தில் உள்ள பழங்குடியின சமூகங்களுக்கு நீதி வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா குறிப்பிட்டாா். ‘இந்த நடவடிக்கையின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை; பழங்குடியினா் வாழ்வை மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கம் மட்டுமே உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் சுமாா் 27,000 போ் பலனடைவா்’ என்றும் அவா் கூறினாா்.

தமிழகத்தில் பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை சோ்க்க வேண்டுமென்ற மாநில அரசின் பரிந்துரையின்பேரில் இந்த மசோதா உருவாக்கப்பட்டது. தமிழக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், இந்திய தலைமைப் பதிவாளா் மற்றும் பழங்குடியினா் தேசிய ஆணையத்திடம் ஆலோசிக்கப்பட்டு, அரசமைப்புச் சட்ட (பழங்குடியினா்) ஆணை-1950 அட்டவணையின் 14-ஆவது பகுதியில் திருத்தம் மேற்கொள்ள முன்மொழியப்பட்டதாக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து, விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு, பழங்குடியினா் பட்டியலின்கீழ் மேற்கண்ட இரு சமூகத்தினரும் அனைத்துப் பலன்களையும் பெற முடியும். குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com