திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதாகவும், புதன்கிழமை காலையிலேயே கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துவிட்டதாகவும் சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க.. ரூ.60 கோடி சொத்துக்காக.. மனைவிகளைக் கொன்ற சகோதரர்கள்
டிசம்பர் 11ஆம் தேதி முதலே, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பக்தர்கள் வருகை தருவதாகவும், டிசம்பர் 12ஆம் தேதியன்று, இதுவரையில்லாத அளவாக 1.07 லட்சம் பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து டிசம்பர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்ததாகவும், முறையே 77,216 மற்றும் 64,617 பக்தர்களும் அன்றைய நாள்களில் வருகை தந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இணையதளம் வழியே டிசம்பர் 12ஆம் தேதி மட்டும் ஒரு லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்ததாகவும், இது வரலாறு காணாத கூட்டம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிப்பதால், பாதுகாப்புப் பணிகளை கேரள அரசு அதிகரித்துள்ளது. சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளிலும் கூட்ட நெரிசல் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள ஏற்பாடுக செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.