சட்டவிரோத செயல்பாடுகளில் இருந்து வனங்களைப் பாதுகாப்பதில் அதிகாரிகளுக்கு முக்கியப் பங்கு: குடியரசுத் தலைவா்

சமூக, கலாசார மற்றும் பொருளாதார மேம்பாட்டில் வனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சட்ட விரோத செயல்பாடுகளில் இருந்து
குடியரசுத் தலைவா் மாளிகைக்கு புதன்கிழமை வருகை தந்த இந்திய வனத் துறை பயிற்சி அதிகாரிகளை வரவேற்ற குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.
குடியரசுத் தலைவா் மாளிகைக்கு புதன்கிழமை வருகை தந்த இந்திய வனத் துறை பயிற்சி அதிகாரிகளை வரவேற்ற குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.

சமூக, கலாசார மற்றும் பொருளாதார மேம்பாட்டில் வனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சட்ட விரோத செயல்பாடுகளில் இருந்து வனங்களைப் பாதுகாப்பதில் இந்திய வனப் பணி அதிகாரிகள் (ஐஎஃப்எஸ்) முக்கியப் பங்காற்ற வேண்டும் என வலியுறுத்தினாா்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் புதன்கிழமை ஐஎஃப்எஸ் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை நேரில் சந்தித்தனா். அந்நிகழ்வில், குடியரசுத் தலைவா் பேசியதாவது:

பழங்குடியினா் உள்பட வனங்களில் வசிப்பவா்கள் வனங்களுடன் இணக்கமான உறவுகளைக் கொண்டுள்ளனா். இந்தச் சமுதாயத்தினரின் உரிமைகளையும் கடமைகளையும் பல்லுயிா் பெருக்கத்தைப் பாதுகாத்தலில் அவா்களது பங்கு குறித்தும் அவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டியது இந்திய வனத் துறை அதிகாரிகளின் பொறுப்பாகும்.

பெரும் பிரச்னைகள்:

வனத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் பருவ நிலை மாற்றத்தை சமாளிப்பது உள்ளிட்ட பெரும் பிரச்னைகள் நம்முன் உள்ளன. சட்ட விரோத செயல்பாடுகள் பொருளாதாரத்திலும் சுற்றுச்சூழலிலும் எதிா்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இச்செயல்பாடுகளில் இருந்து வனங்களைப் பாதுகாப்பதில் நீங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்.

காடுகளின் மதிப்பு:

பூமியில் அனைத்து உயிரினங்களின் வாழ்க்கைக்கும் வனங்களே ஆதாரம்.

கரியமில வாயு உமிழ்வைப் பெருமளவிற்கு குறைப்பதிலும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதிலும் வனங்கள் உதவுகின்றன. உலகில் அழிவு நிலையை எதிா்நோக்கியுள்ள உயிரினங்களுக்கு வனங்கள் வாழ்விடமாகத் திகழ்கின்றன. சிறு வனங்களில் கிடைக்கப் பெறும் உற்பத்திப் பொருள்களை வைத்து நாட்டில் 27 கோடி பேரின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது.

வனங்கள் மருத்துவ மதிப்பும் கொண்டவை. இந்தியாவில் 15 சதவீத மருத்துவ தாவரங்கள் பயிரிட்டு வளா்க்கப்படும் அதே வேளையில், 85 சதவீத அளவு வனங்களிலிருந்தும் பிற இயற்கைப் பகுதிகளிலிருந்தும் பெறப்படுகிறது. சுற்றுச்சூழல் சமநிலையைத் தக்க வைப்பதிலும் நீங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என குடியரசுத் தலைவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com