இந்திய விமானப் படைத் தேர்வில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி சானியா மிர்சா தேர்ச்சிபெற்றுள்ளார். இதன் மூலம் நாட்டின் முதல் முஸ்லிம் பெண் போர் விமானி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
நாட்டின் முதல் போர் விமானியான அவ்னி சதுர்வேதியைத் தொடர்ந்து, இந்திய விமானப்படையில் போர் விமானத்தை இயக்கவுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்ஸாபூர் மாவட்டத்திற்குட்பட்ட ஜசோவார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சானியா மிர்சா. இவரின் தந்தை டிவி மெக்கானிக். இவர் தேசிய பாதுகாப்பு அகாதெமியின் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய விமானப் படை போர் விமானியாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர், தனது கிராமத்திலேயே ஹிந்தி மொழிப் பாடங்களைப் பயின்று பள்ளிப் படிப்பை முடித்தவர். 2017ஆம் ஆண்டு புணேவிலுள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமியில் சேர்ந்துள்ளார். மாநில மொழியில் கல்வி கற்றவர்களாலும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்பதற்கு உதாரணமாகவும் சானியா மாறியுள்ளார்.
மேலும், முஸ்லிம் வகுப்பில் போர் விமானியாகும் முதல் பெண், உத்தரப் பிரதேசத்தில் போர் விமானியாகும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார் சானியா மிர்சா. இதனால், அவரின் பெற்றோரும், கிராமத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சானியா மிர்சாவின் தந்தை சாஹித் அலி கூறியதாவது, ''சிறுவயதிலிருந்தே அவ்னி சதுர்வேதியை என் மகள் தனது ரோல் மாடலாக எடுத்துக்கொண்டார். அவரைப் போல போர் விமானியாக வேண்டும் என்பதே என் மகளின் கனவு. எங்கள் கிராமத்திலேயேதான் சானியா பள்ளிப் படிப்பை முடித்தார். அதனைத் தொடர்ந்து நகரத்திற்கு சென்று கல்லூரிப் படிப்பை பயின்றார். 12ஆம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் மாணவியாக அவர் தேர்வானார். அதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு அகாதெமியில் சேர்ந்தார். தற்போது எங்கள் கிராமமே சானியாவால் பெருமைப்படுகிறது'' என்று நெகிழ்ந்தார்.
தொடர்ந்து பேசிய சானியா மிர்சாவின் தாயார் தபாசும் மிர்சா, ''எங்கள் மகள் எங்களையும் எங்கள் கிராமத்தையும் பெருமைப்படச் செய்துள்ளார். எங்கள் கிராமத்திலுள்ள பெண்களுக்கு தங்கள் கனவை எட்ட என் மகள் ரோல் மாடலாக மாறியுள்ளார்'' எனக் குறிப்பிட்டார்.