புதுதில்லி: நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ள 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகளில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் "இந்தியாவின் சாலை விபத்துகள் -2021" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 2021 ஆம் ஆண்டில் 4,12,432 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன, இதில் 1,53,972 பேர் பலியாகி உள்ளனர் மற்றும் 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், 2019 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் விபத்துக்கள் தொடர்பான முக்கிய குறிகாட்டிகள் சிறப்பாக செயல்பட்டதாக கூறியுள்ளது.
2019 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் சாலை விபத்துக்கள் 8.1 சதவிகிதமாகவும், காயங்கள் 14.8 சதவிகிதமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இருப்பினும், சாலை விபத்துக்களால் ஏற்படும் இறப்புகள் 2019 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டில் 1.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில், நாட்டில் நிகழ்ந்துள்ள சாலை விபத்துக்கள், இறப்புகள் மற்றும் காயங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளன.
நாடு முழுவதும் கரோனா தொற்றுநோய் பரவல் அதிகரித்ததின் விளைவாக, 2020 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் கடுமையான நாடு தழுவிய பொது முடக்கமும் ஓர் காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
ஆசியா பசிபிக் சாலை விபத்தின் கீழ் ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் வழங்கிய தரவுகள் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுவுரகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.