2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து மாநிலங்களவையில் 11 மணி நேரம் வரை விவாதிக்கலாம் என்று மாநிலங்களவை ஆலோசனை குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று குடியரசுத் தலைவர் உரையின் மீதான விவாதம் 12 மணி நேரம் நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. இதில் மாநிலங்களவை, மக்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரை மீது 12 மணி நேரமும், மத்திய பட்ஜெட் மீது 11 மணி நேரமும் விவாதம் நடத்த, மாநிலங்களவை அலுவலக ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரு அவைகளிலும், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, இன்று முதல் 7ஆம் தேதி வரை விவாதம் நடைபெறவுள்ளது.