கர்நாடகத்தில் பல்வேறு கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் பல்வேறு கல்லூரிகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்து மாணவர்களின் எதிர்ப்பினால் உடுப்பி அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகள் கடந்த டிசம்பர் மாதம் முதல் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து 6 மாணவிகளும் உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, பல்வேறு கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து தங்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஷிவமோகா மாவட்டத்தின் பத்ராவதி நகரில் உள்ள அரசு கல்லூரியில், முஸ்லிம் மாணவிகள், தாங்கள் அணிந்து வந்த ஹிஜாபை கழற்றும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர்கள் கழட்ட மறுத்ததால் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து கல்லூரி முதல்வர், அந்த மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை கர்நாடகத்தில் பல கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.