பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரண்டு நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் (92) கடந்த ஜனவரி 8-ம் தேதி மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 25 நாள்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை காலமானார். பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | லதா மங்கேஷ்கர் மறைவு: முழு அரசு மரியாதையுடன் மாலை இறுதி அஞ்சலி
மருத்துவமனையில் உள்ள லதா மங்கேஷ்கரின் உடல் பகல் 12.30 மணியளவில் அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சிவாஜி பூங்காவில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு நாடு முழுவதும் இன்றும் (பிப்ரவரி 6) நாளையும் (பிப்ரவரி 7) துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படவுள்ளது.