பிரபல பின்னணி பாடகரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், இசை மற்றும் இனிமையின் அடையாளமாக திகழ்ந்த லதா தீதி, தமது வசீகரமான குரலால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இசை உலகிற்கு அவர் அளித்துள்ள பங்களிப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்று கூறியுள்ள அவர், லதா தீதியின் மறைவு தமக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என்று தெரிவித்துள்ளார்.
லதா தீதியின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பெற்றிருந்தது தமது பாக்கியம் என்று குறிப்பிட்டுள்ள அமித் ஷா, இணையற்ற தேசபக்தி, இனிமையான பேச்சு ஆகியவற்றுடன் அவர் என்றும் நம்மிடையே இருப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்தினர் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை அமித் ஷா தெரிவித்துள்ளார்.