ஜெய்ப்பூர்: வெளிநாடுகளிலிருந்து தங்கத்தைக் கடத்தி வரும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் தங்கம் விலை உயர்வதுபோல, தங்கத்தைக் கடத்தி வருவதும் அதிகரித்துள்ளது.
சுங்கத் துறை அதிகாரிகள் பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தங்கக் கடத்தல்களை கண்டுபிடித்தாலும், புதுப் புது வழிகளில் தங்கத்தைக் கடத்தி வரும் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
இதையும் படிக்க.. அவிநாசியில் விஏஓ லஞ்சம் பெறுவது தொடர்பான பட்டியலால் பரபரப்பு
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில், இன்று துபையிலிருந்து வந்திறங்கிய பயணி, பரிசோதனை இயந்திரத்தைக் கடந்து சென்றபோது பீப் சப்தம் எழுந்தது. ஆனால், அவரை தனியாக பரிசோதனை செய்ததில், அவரிடம் எதுவும் கிடைக்கவில்லை. சந்தேகம் தீராததால், அதிகாரிகள் அவரை மீண்டும் பரிசோதித்தபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது.
அவர் தனது நாக்கின் கீழ், 116.590 கிராம் எடையுள்ள தங்கத்தை இரண்டு பொத்தான்கள் போல செய்து, வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.5.79 லட்சம் என்பது தெரியவந்துள்ளது. இவர் துபையில் வேலை செய்து வந்ததும், இந்தியாவுக்குத் திரும்பி வரும்போது, தனது வருவாயில் சேமித்த பணத்தை தங்கமாக வாங்கி, அதற்கு வரிசெலுத்தாமல் தப்பிக்க, இப்படி கடத்தி வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளளார்.