'18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3வது தவணை தடுப்பூசி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை' - மத்திய அரசு

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்துவது குறித்து அறிவியல் தேவையின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்துவது குறித்து அறிவியல் தேவையின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கரோனா தடுப்பூசி பயன்பாட்டில் இருந்து வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுபோல, 15 -18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி(மூன்றாவது தவணை தடுப்பூசி) செலுத்துவது குறித்து அறிவியல் தேவையின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால், 'அறிவியல் தேவையின் அடிப்படையிலே இங்கு அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகிறது. மக்களுக்கு கூடுதல் தடுப்பூசி போடுவதற்கான தேவை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. தடுப்பூசி குறித்த அனைத்து ஆய்வுகளும் தீவிரமாக உள்ளன' என்றார். 

சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், வயதினரின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை வேறுபட்டாலும் ஒட்டுமொத்தமாக தடுப்பூசி இயக்கம் நன்றாகவே உள்ளது என்றார்.

'கடந்த ஆண்டு அக்டோபரில் தினமும் சராசரியாக 77.55 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. நவம்பரில் சுமார் 59.32 லட்சம், டிசம்பரில் 61.91 லட்சமாகவும், ஜனவரியில் 69.49 லட்சமாகவும் கடந்த 9 நாட்களில் தோராயமாக ஒவ்வொரு நாளும் சராசரியாக 51 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

முதல் தவணை 96 சதவிகிதம், இரண்டாவது தவணை 78 சதவிகிதம் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் தடுப்பூசி செலுத்த வேண்டிய மக்கள் இருக்கிறார்கள். இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத இளம் பருவத்தினரிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வைக் கொண்டுவர வேண்டும்' என்றார். 

தடுப்பூசியின் பயன்பாடு தொற்று எண்ணிக்கை குறைவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று ஐ.சி.எம்.ஆர். இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com