மங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பியில், ஹிஜாப் அணிந்து கொண்டு கல்லூரிக்கு வருவது தங்களது உரிமை என்று போராடிய 6 பெண்களின் விவரங்களை, சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருப்பதாக, அவர்களது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
உடுப்பி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்ணுவர்தனிடம், இது தொடர்பாக புகார் மனு கொடுத்துள்ள பெற்றோர், சமூக வலைத்தளத்தில் தங்களது பெண்களின் செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட முக்கிய விவரங்களை வெளியிட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவரங்களை வைத்துக் கொண்டு, சமூக விரோதிகள் தங்களது பெண்களை மிரட்டக்கூடும் என்றும் பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எழுத்து வடிவில் புகார் மனு அளிக்குமாறு பெற்றோரிடம் கூறப்பட்டது. மேலும், சமூக வலைத்தளங்களில் பெண்களின் விவரங்கள் இருந்ததுதொடர்பான ஆதாரங்களையும் பெற்றோர்களிடம் காவல்துறையினர் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.