திருப்பூரில், தாராபுரம் சாலை புதுநகர் பகுதியில், கால்வாயில் வீசப்பட்டிருந்த சூட்கேஸில், பெண் சடலம் இருந்த வழக்கில், காவல்துறையினர், கொலையாளிகளின் விவரங்களைக் கண்டறிந்துள்ளனர்.
கொலையாளிகள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அபிஜித் மற்றும் ஜெய்லால் என்பதும், அவர்கள் ஓசூர் அல்லது கர்நாடகத்தின் ஏதேனும் ஒரு பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காவல்துறை தனிப்படைகள் அங்கு விரைந்துள்ளனர்.
திருப்பூர் அருகே சூட்கேஸில் மறைத்து வைத்து சாக்கடை கால்வாயில் வீசப்பட்ட பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் திங்கட்கிழமை மீட்டனர்.
திருப்பூரிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உள்ள பொள்ளிகளிபலயம் பிரிவு அருகே சாக்கடை கால்வாயில் சூட்கேஸ் ஒன்று அநாதையாக கிடப்பதாக ஊரக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சாக்கடையில் வீசப்பட்டிருந்த சூட்கேஸை மீட்டனர். சூட்கேஸை திறந்தபோது கழுத்தை அறுத்து கொலை செய்து வைக்கப்பட்டிருந்த 25 வயது உடைய பெண்ணின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அந்த சடலத்தை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண் யார், அவரது ஊர் உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த வழக்கில், சூட்கேஸ் இருந்த இடத்துக்கு அருகே இருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் சோதித்தபோது, அதில், அந்த சூட்கேஸை இரண்டு இளைஞர்கள் ஒரு வாகனத்தில் வைத்து எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது.
பெண்ணின் புகைப்படம் மூலம், அவர் குடியிருந்த வீட்டை காவல்துறையினர் கண்டுபிடித்து, அக்கம் பக்கத்தில் வசித்து வந்தவர்களை விசாரித்தனர். அதில், கொலையான பெண்ணின் பெயர் நேகா என்பதும், அவர் அபிஜித் என்பவருடன் வெள்ளியங்காடு பகுதியில் கடந்த ஒரு மாதமாக வசித்து வந்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, அபிஜித், தான் குடியிருந்த வீட்டின் உரிமையாளரிடம், வீட்டை காலி செய்வதாகக் கூறி பொருள்களுடன் பொருள்களாக, நேகாவை அடைத்து வைத்திருந்த சூட்கேஸையும் எடுத்துச் சென்று, சாலையோரம் வீசியுள்ளான். அவனுக்கு ஜெய்லால் என்பவர் உதவியுள்ளார். இருவரது செல்லிடப்பேசி எண்களை பின்தொடர்ந்ததில், அது இறுதியாக கர்நாடக எல்லையில் இருப்பதாகக் காட்டுகிறது. இதையடுத்து அப்பகுதிக்கு தனிப்படையினர் விரைந்துள்ளனர்.