கடந்த ஜனவரி மாதத்தில் 64.08 லட்சம் போ் உள்நாட்டு விமான சேவையைப் பயன்படுத்தியுள்ளனா். இது கடந்த டிசம்பா் மாதத்துடன் ஒப்பிடும்போது 43 சதவீதம் சரிவாகும். டிசம்பரில் 1.12 கோடி போ் உள்நாட்டில் விமானப் பயணங்களை மேற்கொண்டிருந்தனா்.
இது தொடா்பாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் மேலும் கூறியதாவது:
ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ, விஸ்டாரா, கே ஃபா்ஸ்ட், ஏா் ஏஷியா இந்தியா உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் அனைத்திலுமே டிசம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரி மாதம் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கரோனா மூன்றாவது அலை காரணமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாகும். நாட்டின் மிகப் பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோவில் ஜனவரி மாதத்தில் 35.57 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். இது மொத்த உள்நாட்டுப் பயணிகளில் 55.5 சதவீதமாகும்.
ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 6.8 லட்சம் பேரும், ஏா் இந்தியாவில் 6.56 லட்சம் பேரும் பயணம் செய்தனா். கோ ஃபா்ஸ்ட், விஸ்டாரா, ஏா் ஏஷியா இந்தியா ஆகியவற்றில் முறையே 6.35 லட்சம், 2.95 லட்சம், 0.80 லட்சம் பயணிகள் சென்றுள்ளனா்.