பிரபல மலையாள திரைப்பட நடிகை கே.பி.ஏ.சி. லலிதா(வயது 74) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு காலமானார்.
கேரள மாநிலம் கொச்சினில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த லலிதா, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆலப்புலா மாவட்டத்தில் பிறந்த லலிதாவின் இயற்பெயர் மகேஷ்வரி அம்மா ஆகும். கேரள மக்கள் கலை சங்கத்தில்(கேரள பீப்பிள்ஸ் ஆர்ட்ஸ் கிளப்) முதல்முறையாக நாடகத்தில் பங்குபெற்று பின்பு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடகங்களில் லலிதா என்ற பெயரில் நடித்து வந்ததால், கேபிஏசி லலிதா என்று அழைக்கப்பட்டார்.
மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கடந்த 50 ஆண்டுகளில் 550க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது இரண்டு முறையும், கேரள மாநில விருது 4 முறையும் பெற்றுள்ளார்.
இவரின் மறைவுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.