உக்ரைனில் சிக்கியுள்ள பஞ்சாபியர்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை அறிவித்துள்ளது பஞ்சாப் அரசு.
நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர்ச்சூழல் நிலவி வந்தது. இந்த சூழ்நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷிய அதிபர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டார். இரு நாள்களாக நடைபெற்ற தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன. ரஷிய தாக்குதலில் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது. எனினும் தொடர்ந்து ரஷியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருவதாகக் கூறியுள்ளது.
உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டினரை, மாநிலத்தவரை மீட்க அரசுகள் முழு முயற்சி எடுத்து வருகின்றன.
மத்திய அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள பஞ்சாபியர்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை அறிவித்துள்ளது பஞ்சாப் அரசு.
இதற்காக பஞ்சாபில் 24*7 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள மக்கள் 1100 என்ற இலவச எண்ணுக்கும் இந்தியாவுக்கு வெளியே உள்ளவர்கள் +91-172-4111905 என்ற எண்ணுக்கும் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உக்ரைனில் சிக்கியுள்ள பஞ்சாபியர்களை பாதுகாப்பாக மீட்க கோரிக்கை விடுத்தார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு ஐ.நா. அமைப்பு மற்றும் பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.