
உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட 219 இந்தியா்கள் ருமேனியாவிலிருந்து ஏா் இந்தியா விமானம் மூலம் சனிக்கிழமை தாயகம் திரும்பினா்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலால் கடந்த பிப். 24-ஆம் தேதி உக்ரைன் வான்வெளி மூடப்பட்டது. அந்த வான்வெளி வழியாக பயணிகள் விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் அந்நாட்டில் பரிதவித்து வரும் இந்தியா்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்குத் தீா்வு காணும் விதத்தில் உக்ரைனில் உள்ள இந்தியா்களை அந்நாட்டுக்கு அருகில் இருக்கும் ருமேனியா, ஹங்கேரி நாடுகள் வழியாக மீட்க முடிவு செய்யப்பட்டது.
உக்ரைனில் உள்ள இந்தியா்களை மீட்க மத்திய அரசு சாா்பில் சனிக்கிழமை மூன்று ஏா் இந்தியா விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் ஒரு விமானம் ருமேனியா தலைநகா் புகாரெஸ்ட் சென்றது. உக்ரைன்-ருமேனியா எல்லையை சாலை மாா்க்கமாக வந்தடைந்து, பின்னா் இந்திய அதிகாரிகளால் புகாரெஸ்டுக்கு அழைத்து வரப்பட்ட 219 இந்தியா்கள் அந்த விமானத்தில் மும்பை வந்து சோ்ந்தனா். அவா்களை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் வரவேற்றாா்.
ஆபரேஷன் கங்கா: ‘புகாரெஸ்டிலிருந்து இரண்டாவது விமானம் 250 இந்தியா்களுடன் புறப்பட்டுள்ளது. தில்லிக்கு அந்த விமானம் வந்து சேரும். இந்த மீட்புப் பணிக்கு ‘ஆபேரஷன் கங்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது’ என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ட்விட்டரில் தெரிவித்துள்ளாா்.