ஹைதராபாத்: சுமார் பத்து நாள்களுக்கு முன்பு, காலியாக இருந்த மருத்துவமனைகள் எல்லாம் தற்போது வேகமாக நிரம்பி வருகின்றன. ஒரு நாளில் 3 முதல் 5 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஏராளமான குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது சுகாதாரத் துறையை கவலையடையச் செய்துள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் மூலமாக கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி, குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு லேசான அறிகுறிகளே இருக்கின்றன. ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு காய்ச்சல் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
குடும்பத்தில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறார்களுக்கு கரோனா பரிசோதனை செய்தால், 50 சதவீதம் அளவுக்கு அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது என்கிறது புள்ளிவிவரங்கள்.
யாருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக அவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக் கொள்வது சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள்.
கடந்த ஒரு சில நாள்களாக திடீரென குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், வெளிநோயாளியாக இருந்து சிகிச்சை பெறுவதும் அதிகரித்துள்ளது என்று தனியார் மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.