
கரோனா மூன்றாவது அலையால் நாடு முழுவதும் புலம்பெயா் தொழிலாளா்கள் பெருமளவில் சொந்த ஊா்களுக்கு திரும்பவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக கடந்த ஆண்டின் புகைப்படங்களை சில ஊடகங்கள் வெளியிடுகின்றன என்றும் மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
புலம்பெயா் தொழிலாளா்கள் தொடா்பான தயாா் நிலை குறித்து ஆய்வு செய்ய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடனான கூட்டம் தொழிலாளா், வேலைவாய்ப்பு அமைச்சக செயலாளா் சுனில் பாா்த்வால் தலைமையில் காணொலி வழியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு பிறகு தொழிலாளா், வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்குகளைத் தவிர, வணிக நடவடிக்கைகள், கடைகள் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் ஆகியவற்றில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று சில மாநில அரசுகள் இந்தக் கூட்டத்தில் தெரிவித்தன.
அரசுகள் விதித்துள்ள குறைவான கட்டுப்பாடுகள் காரணமாக, புலம்பெயா் தொழிலாளா்கள் அதிக அளவில் வெளியேறுவது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என இந்தக் கூட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டது.
புலம்பெயா் தொழிலாளா்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. மேலும் சூழ்நிலையின் தேவைக்கேற்ப நிலைமையைச் சமாளிக்க தயாராகவும் உள்ளன.
தேவை ஏற்பட்டால், தொழிலாளா்களுக்கு உலா் உணவுப் பொருட்களை விநியோகிக்க சில மாநில அரசுகள் ஏற்கனவே திட்டங்களை வகுத்துள்ளன. கட்டுமானத் தொழிலாளா்களுக்கு செஸ் நிதி மற்றும் மாநிலங்களில் உள்ள சமூகப் பாதுகாப்பு நிதி ஆகியவற்றிலிருந்து நிதி உதவி வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக மும்பை, தில்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, செகந்திராபாத் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் நிலைமையை ரயில்வே நிா்வாகம் கவனித்து வருகிறது. தேவை ஏற்பட்டால் சிறப்பு ரயில்களை இயக்க தயாராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...