அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படுவது ஏன்? மத்திய அரசு விளக்கம்

புது தில்லியில் அமைந்துள்ள அமர் ஜவான் ஜோதி, இடமாற்றம் செய்யப்படுவது தொடர்பாக பல்வேறு உறுதி செய்யப்படாத தகவல்கள் புரளியாகப் பரவி வருகிறது.
அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படுவது ஏன்? மத்திய அரசு விளக்கம்
அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படுவது ஏன்? மத்திய அரசு விளக்கம்
Published on
Updated on
1 min read


புது தில்லியில் அமைந்துள்ள அமர் ஜவான் ஜோதி, இடமாற்றம் செய்யப்படுவது தொடர்பாக பல்வேறு உறுதி செய்யப்படாத தகவல்கள் புரளியாகப் பரவி வருகிறது.

இந்த நிலையில், அமர் ஜவான் ஜோதி இடமாற்றம் செய்யப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படாது. அது, புது தில்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில எரிந்து வரும் அணையா விளக்குடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு சார்பில் வெளியாகியிருக்கும் தகவல் என்னவென்றால், 1971ஆம் ஆண்டு நடந்த போரில் உயிர் நீத்த போர் வீரர்களின்  நினைவாக இந்த அமர் ஜவான் ஜோதி ஏற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் நாளில் இங்கு வீர வணக்கம் செலுத்தப்படும். ஆனால், இங்கு 1971ஆம் ஆண்டு போரின் போது உயிர் தியாகம் செய்த வீரர்களின் பெயர்களோ அல்லது அதன்பிறகு நடந்த வேறு எந்த போர்களில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் பெயர்களோ இடம்பெறவில்லை.

அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில் வீர வணக்கம் செலுத்தும் போது, அங்கு எந்த போர் வீரர்களின் பெயரும் இடம்பெற்றிருக்காது. ஆனால், தற்போது போர் நினைவிடத்தில் இந்த அணையா விளக்கை இணைக்கும் போது, இங்கு 1971ஆம் அண்டு போர் மற்றும் அதற்கு முந்தைய, அதற்குப் பிந்தைய போர்களில் உயிர் நீத்த போர் வீரர்களின் பெயர்கள் முழுமையாக இடம்பெற்றிருக்கும். எனவே, தேசிய போர் நினைவிடத்தில், தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவதுதான், உண்மையான கதாநாயாகர்களை கௌரவப்படுத்துவதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, தேசிய போர் நினைவிடம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று சுமார் 70க்கும் மேற்பட்ட ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்குத் தோன்றவில்லை. ஆனால், முதல்முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றதுமே பிரதமர் நரேந்திர மோடி, போர் நினைவிடத்தை உருவாக்க திட்டமிட்டு, கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய போர் நினைவிடத்தைத் திறந்து வைத்தார்.

இதற்கிடையே, அமர் ஜவான் ஜோதியை இடமாற்றும் முடிவுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியா கேட் அருகே உள்ள அமர் ஜவான் ஜோதி அணைக்கப்பட்டு, அது தேசிய போர் நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை இணைக்கப்படும் என்று இந்திய ராணுவம் வியாழக்கிழமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா கேட் அருகே இருக்கும் நினைவிடம், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், கட்டப்பட்டது. பிறகு, 1970ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரின் போது இந்தியா வெற்றிபெற்றதை நினைவுகூரும் வகையில் இந்த நினைவிடத்தில் அமர் ஜவான் ஜோதி எனப்படும் அணையா விளக்கு ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com