தேரத்ல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டு சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக ராகுல் காந்தியின் வீட்டில் அவருடன் தனியாக நடத்திய பேச்சுவார்த்தை அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
அப்போது காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு கேட்பதாகவும் கூட தகவல் வெளியானது. இருப்பினும், மூத்த தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அனைத்து விதமான பேச்சுவார்த்தைகளும் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதில்லை என்றும் தகவல் வெளியானது.
அது நாள் வரை காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமரிசிக்காமல் இருந்த பிரசாந்த் கிஷோர், அதன் பின்னரே கடுமையாகத் தாக்கி பேசத் தொடங்கினார். கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் சுமார் 90% இடங்களை இழந்துள்ள ஒரு கட்சியை எந்தவொரு தகுதி வாய்ந்த நபரும் வழிநடத்தலாம் எனத் தெரிவித்திருந்தார்.
அதேநேரம் வரும் 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பங்கு இருக்கும் என்பதைக் குறிப்பிட்ட பிரசாந்த் கிஷோர், ஆனால் அதற்கு வலுவான ஒரு தலைமை வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அளித்த பேட்டியின்போது பிரசாந்த கிஷோர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, "கடந்தாண்டு ஒரு கட்டத்தில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாகத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது உண்மை தான்.
இதையும் படிக்க | உ.பி. காங்கிரஸ் முகம் யார்? பிரியங்கா காந்தி புதிய விளக்கம்
ஆனால் அது நடைபெறாமல் போக பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில், அவர் தரப்பில் சில தவறுகள் உள்ளது. அதேபோல எங்கள் தரப்பில் சில தவறுகள் உள்ளன. என்ன தவறுகள் என்று நான் விளக்க விரும்பவில்லை. இருப்பினும் சில குறிப்பிட்ட முக்கிய விஷயங்களில் எங்கள் இரு தரப்பினருக்கு இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
இது பேச்சுவார்த்தையை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துவதில் தடையாக இருந்தது. வெளியாள் ஒருவரைக் காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டு வருவதில் நாங்கள் தயங்கவில்லை. அப்படி நாங்கள் தயங்கி இருந்தால் பலகட்ட பேச்சுவார்த்தை கூட நடந்திருக்காது" என்றார்.