உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் முகம் நான் மட்டும்தான் எனக் கூறவில்லை என்று மேலிடப் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி விளக்கமளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி, சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் முகம் நான்தான் எனக் கூறினார்.
இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரியங்கா காந்தி அளித்த பிரத்யேக பேட்டியில் காங்கிரஸின் முகம் நான் மட்டுமல்ல என விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
"உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் நான் மட்டுமே காங்கிரஸின் முகம் எனக் கூறவில்லை. நீங்கள் ஒரே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டதால் அதை சற்று மிகைப்படுத்திக் கூறினேன்.
நிறைய மாநிலங்கள் உள்ளன. அங்கெல்லாம் பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி, மேலிடப் பொறுப்பாளர்கள் இருப்பார்கள். நீங்கள் முதல்வர் வேட்பாளரா என அவர்களிடம் கேட்பீர்களா? பிறகு ஏன் இந்தக் கேள்வி என்னிடம் முன் வைக்கப்படுகிறது?" என்றார் அவர்.
உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது.