உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக தவிர்த்து எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கத் தயார் என காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனினும், பாஜகவும் சமாஜவாதியும் ஒரே அரசியலைக் கடைப்பிடித்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாது:
"பாஜகவுக்கு கதவடைக்கப்பட்டு மற்ற கட்சிகளுக்குத் திறக்கப்பட்டுள்ளன. சமாஜவாதி மற்றும் பாஜக ஒரே பாணியிலான அரசியலைக் கடைப்பிடித்து இரண்டு கட்சிகளுமே அதிலிருந்து பலனடைகின்றனர். பொதுமக்கள் பலனடைய வேண்டும் என நாங்கள் கூறுகிறோம்.
வகுப்புவாதம் மற்றும் சாதியின் அடிப்படையில் செயல்படும் கட்சிகளுக்கு ஒரே நோக்கம்தான் இருக்கும். ஒருவருக்கொருவர் பலனடைந்துகொள்வார்கள்.
எங்களது பிரதான எதிரி வேலையின்மை, விலை உயர்வு, மாநிலம் மற்றும் விவசாயிகளின் நிலை தான். இவற்றுக்கு எதிராகதான் நாங்கள் போட்டியிடுகிறோம்
எதிர்காலம் குறித்து என்னால் கூற முடியாது. வெற்றி இடங்களைக் கணிப்பது முதிர்ச்சியின்மை.
நாங்கள் போட்டியிடுவதில் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம். 2022 தேர்தலுடன் அது முடிந்துவிடாது.
முக்கியமான பிரச்னைகளுக்காக நாங்கள் போராடவுள்ளோம். மக்கள் பிரச்னைகளுக்கான முன்நிற்கும் முதன்மைக் கட்சி நாங்கள்தான்.
இன்றைய நிலவரப்படி உத்தரப் பிரதேசத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்துள்ளன. நாங்கள் அதையே தொடருவோம்" என்றார் பிரியங்கா.
உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது.