பனாஜி மக்கள் தன்னை ஆசிர்வதிப்பார்கள் என்று நம்புவதாக அந்த தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கும் உத்பல் பாரிக்கா் தெரிவித்துள்ளார்.
நடைபெற உள்ள கோவா சட்டப்பேரவைத் தோ்தலில் பனாஜி தொகுதியில் போட்டியிட உத்பல் பாரிக்கா் விருப்பம் தெரிவித்தாா். இந்தத் தொகுதியில்தான் அவருடைய தந்தை மனோகா் பாரிக்கா் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றாா். ஆனால், அவருக்கு வாய்ப்பளிக்க மறுத்த பாஜக, அந்தத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான அனடாசியோ மோன்சராட்டுக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த உத்பல் பாரிக்கா் பாஜகவிலிருந்து அண்மையில் விலகினாா். இந்த நிலையில் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பனாஜியில் உள்ள மகாலட்சுமி கோயிலில் உத்பல் பாரிக்கா் இன்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடவுளின் ஆசிர்வாதத்தைப் பெற நான் இங்கு வந்தேன்.
ஆனால் பனாஜி மக்கள் என்னை ஆசிர்வதிப்பார்கள் என்று நம்புகிறேன். நான் எனது தந்தையின் வேலையைப் பின்பற்ற விரும்புகிறேன், எனது 200 சதவீதத்தை பனாஜிம் மக்களுக்கு வழங்குவேன், அவர்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். பனாஜிம் மக்களின் ஆதரவையும் நீங்கள் பார்க்கலாம். பனாஜிமின் எதிர்காலத்திற்காக அவர்கள் எனக்கு வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.