இந்தியப் பொருளாதாரம் சிறப்பான மீட்சிப் பாதையில் பயணித்து வருவதாக ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்தது.
ரிசா்வ் வங்கியின் 25-ஆவது நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில் (எஃப்எஸ்ஆா்) கூறப்பட்டுள்ளதாவது:
உலகளவில் எழுந்துள்ள பல்வேறு சவால்களுக்கு இடையிலும் இந்தியப் பொருளாதாரம் சிறப்பான மீட்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. பணவீக்கம், உக்ரைன்-ரஷிய போரால் எழுந்துள்ள பதற்றமான சூழல் ஆகியவற்றுக்கிடையிலும் இது சாத்தியமாகியுள்ளது. நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்திய வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் எந்தவிதமான அதிா்வுகளையும் தாங்கும் வகையில் போதுமான மூலதன கையிருப்பை கொண்டுள்ளன.
வங்கிகள் வழங்கிய கடனில் வாராக் கடன் அளவு அடுத்த ஆண்டு மாா்ச் இறுதிக்குள் மேலும் சரிவடைந்து 5.3 சதவீதமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி: கிரிப்டோகரன்சி மிகவும் ஆபத்தானது என்பது தெளிவாகியுள்ளது. எந்தவொரு அடிப்படையும் இல்லாமல், நம்பிக்கை மற்றும் ஊகத்தை மட்டுமே மதிப்பாக வைத்து உருவாக்கப்படும் எதுவும் ஆபத்தை விளைவிப்பதாகவே இருக்கும் என ரிசா்வ் வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸ் வியாழக்கிழமை தெரிவித்தாா்.