கேதார்நாத் கோயிலின் கருவறைக்குள் பக்தர்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டித் தலைவர் அஜேந்திர அஜய் கூறுகையில்,
பாதுகாப்பு காரணங்களுக்காக மே 6ஆம் தேதி முதல் கோயிலின் கருவறைக்குள் நுழையப் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
கோயிலின் கருவறையில் மிகக் குறைந்த இடமே உள்ளதாலும், பக்தர்களை உள்ளே அனுமதிப்பது ஆபத்தானதும் கூட. எனவே சபா மண்டபத்திற்கு மேல் பக்தர்கள் செல்லமுடியாதபடி தடை விதிக்கப்பட்டது.
ஆனால் வெள்ளிக்கிழமை முதல் அந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதும், தினசரி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் கேதார்நாத் யாத்திரை தொடங்கியபோது சராசரியாக ஒரு நாளைக்கு 16 ஆயிரம் முதல் 17 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு வந்தனர். ஆனால் இது தற்போது 2 ஆயிரம் முதல் 3 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
மேலும், பருவமழை மற்றும் பள்ளி, கல்லூரிகளில் கோடை விடுமுறை என்பதாலும் பக்தர்கள் குறைய வாய்ப்புள்ளது என்றார்.
கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆலயங்கள் மே 6 மற்றும் 8ஆம் தேதிகளில் திறக்கப்பட்டதிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை வரை 17,39,771 பேர் வருகை தந்துள்ளனர்.