ஹைதராபாத்: ஹைதராபாத்தின் பெயரை பாக்யநகர் என்று மாற்ற வேண்டும் என பாஜகவினர் பல காலமாக கூறிவரும் நிலையில், பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஹைதராபாத் நகரை பாக்யநகர் என்று குறிப்பிட்டு பேசியது முக்கியத்துவம் பெறுகிறது.
நாங்கள் அனைவரும் பல காலமாக வலியுறுத்தி வரும் நிலையில், ஹைதராபாத் நகரை பாக்யநகர் என்று பிரதமர் மோடி அழைத்தார். ஒற்றுமையான இந்திய நாட்டை வலியுறுத்தி சர்தார் படேல் இங்குதான் ஒற்றை இந்தியா என்ற முழக்கத்தை உருவாக்கினார். அப்போது இது பக்யநகர் என்றே அழைக்கப்பட்டது. அந்த பழைய மரபை மீட்கும் கடமை பாஜகவுக்கே உள்ளது என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
இதையும் படிக்க.. என்ன படிக்கலாம்? இளநிலை உளவியல் படிப்புகளுக்கு கூடும் வரவேற்பு
பாஜகவின் 2- நாள் தேசிய செயற்குழுக் கூட்டம், ஹைதராபாதில் சனிக்கிழமை தொடங்கியது. அதில், பாஜகவின் அமைப்பு ரீதியான செயல்பாடுகள், பிரதமா் மோடி தலைமையிலான அரசின் பொருளாதார கொள்கைகள், ஒட்டுமொத்த நிா்வாகம் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை, பிரதமா் மோடி பங்கேற்று நிறைவுரை ஆற்றினாா். அவா் கூறியதாவது: சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இந்தியாவை சா்தாா் வல்லபபாய் படேல் ஒரே தேசமாக ஒருங்கிணைத்தாா். தற்போது, இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற வரலாற்றுக் கடமை பாஜகவுக்கு உள்ளது. அதற்கேற்ப பாஜக தொண்டா்கள் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
ஹைதராபாத் நகரை, பாக்யநகர் என்று மோடி கூறியிருந்த நிலையில், நகரின் பெயர் மாற்றப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளிக்கையில், தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், அமைச்சர்களுடன் கலந்தாலோசனை நடத்தி, தெலங்கானா முதல்வர்தான் அதனை முடிவு செய்வார் என்று தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என்று பல காலமாக பாஜகவினர் வலியுறுத்தி வருகிறார்கள். 2020ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது, பிரசாரம் மேற்கொள்ள வந்த யோகி ஆதித்யநாத், ஹைதராபாத் நகரை பக்யநகராக மாற்ற பாஜகவுக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.