அமர்நாத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலியானார்கள்.
ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத்தில் இன்று திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெருவெள்ளம் சூழ்ந்தது. இதில் சிக்கி 2 பேர் பலியானார்கள். பலர் மாயமானார்கள். காயமடைந்தவர்களை மீட்க ஹெலிகாப்டர் விரைந்துள்ளது.
மேலும் சம்பவ இடத்தில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் பனிக்குகை நோக்கிய 43 நாட்கள் பயணம், காஷ்மீரில் உள்ள இருமுகாம்களில் இருந்து ஜூன் 30 தொடங்கி, ஆகஸ்ட் 11-ஆம் தேதி முடிவடைகிறது. அமர்நாத் யாத்திரைக்கு 3 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் பதிவுசெய்துள்ளனர்.
கரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக யாத்திரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.