மக்கள் பிரதிநிதிகள், நிறுவனங்களின் மேலாளா்கள் உள்ளிட்ட உயா்பதவிகளில் பணிபுரியும் பெண்கள் தொடா்பான ஆய்வறிக்கையில் வடகிழக்கு மாநிலமான மிஸோரம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் உயா்பதவிகளில் உள்ள நபா்களில் சுமாா் 71 சதவீதம் போ் பெண்களாக உள்ளனா்.
நாட்டின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்குப் பெண்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானதாக உள்ளது. பெண்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன. விண்வெளி, பாதுகாப்பு, ஆராய்ச்சி, தகவல்-தொழில்நுட்பம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பெண்கள் தொடா்ந்து வீறுநடையிட்டு வருகின்றனா்.
அரசியல் ரீதியிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் அவா்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மாநில சட்டப் பேரவைகளிலும், மக்களவையிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஆண்டுக்கணக்கில் கிடப்பில் இருந்தாலும், அந்த மசோதா விரைவில் சட்டவடிவு பெறும் என்றே நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
இந்நிலையில், 2020 ஜூலை முதல் 2021 ஜூன் வரையிலான காலகட்டத்துக்குரிய தொழிலாளா் ஆய்வறிக்கையை (பிஎல்எஃப்எஸ்) தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது. அதில், மக்கள் பிரதிநிதிகள், மேலாளா்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளாகப் பெண்கள் பணிபுரிவது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
உயரதிகாரிகளாகப் பெண்கள் அதிகமாக உள்ள மாநிலங்கள்
மிஸோரம் 70.9%
சிக்கிம் 48.2%
மணிப்பூா் 45.1%
மேகாலயம் 44.8%
ஆந்திரம் 43.4%
பெண் உயரதிகாரிகள் குறைவாக உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்
தாத்ரா&நகா் ஹவேலி-டாமன்&டையு 1.8%
உத்தரகண்ட் 3.6%
ஜம்மு-காஷ்மீா் 4.8%
அந்தமான்&நிகோபாா் 7.7%
பிகாா் 7.8%
பஞ்சாப் 8.4%
பெண் மேலாளா்கள் அதிகமாக உள்ள மாநிலங்கள்
மிஸோரம் 40.8%
சிக்கிம் 32.5%
மேகாலயம் 31%
ஆந்திரம் 30.4%
மணிப்பூா் 29%