தவறான கோணத்திலிருந்து புகைப்படம் எடுத்ததே புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள தேசிய சின்னம் சர்ச்சைக்குள்ளானதற்கு காரணம் என சிலை வடிவமைப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
தவறான திசையிலிருந்து புகைப்படம் எடுத்ததால், தேசிய சின்னத்தில் இடம்பெற்றுள்ள சிங்கங்கள் உறுமும் வகையில், மூர்க்கமாக காட்சியளிப்பதாக சிலையை வடிவமைத்த சுணில் தியோர் குறிப்பிட்டுள்ளார்.
தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள தேசிய சின்னத்தை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்துவைத்தாா். இந்த சிலையின் தோற்றம் முன்பு இருந்த தோற்றத்திலிருந்து மாறுபட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து தேசிய சின்னம் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில் தேசிய சின்னத்தை வடிவமைத்த இருவரில் ஒருவரான, சுணில் தியோர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, ''முன்பு இருந்த சாரணாத் சிலையையொத்த வடிவமாகவே அசோகர் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் சிலையின் வடிவமைப்பில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் தவறான கோணத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதனால் தேசிய சின்னத்தில் இடம்பெற்றுள்ள சிங்கங்கள் உறுமுவதைப்போன்றும் மூர்க்கமாகவும் காட்சியளிக்கிறது. நாங்கள் தேசிய சின்னத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை'' எனக் குறிப்பிட்டார்.